Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர்: எல்லாவற்றிலும் கலப்படம் அதிகரித்து விட்டது பாரம்பரிய உணவுக்கு மக்கள் திரும்ப வேண்டும் என்று கரு்ர் கலெக்டர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் தோகைமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது்-
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் செய்யப்படும் கலப்படங்களை உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.நமது பாரம்பரியத்தில் முக்கனிகளாக கருதப்படும் மா பலா வாழை ஆகிய கனி வகைகளில் மாம்பழத்தை கார்பைட் வைத்து பழுக்க வைக்கிறார்கள். வாழையில் புகைமூட்டம் போட்டு பழுக்க வைக்கிறார்கள்.
தர்ப்பூசணி பழம் செக்கச்சிவப்பாக இருக்க சிவப்பு நிறச் சாயம் ஊசி மூலம் ஏற்றப் படுவதாக அறியவருகின்றது. இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை நாம் உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் வரும். அதேபோல டீக்கடைகளில் உள்ள பால் பாத்திரத்தில் ஊற்றப்படும் தண்ணீர் நீர்த்துப்போகாமல் இருக்க ஒரு துணியில் ஜவ்வரிசி கட்டி வைக்கப்பட்டிருக்கும்.
கோழி வளர்ப்பில் எடையை அதிக அளவில் கூட்டிக்காட்டுவதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றது. கோழிக்குஞ்சானது 45 நாட்களில் சுமார் 1½ கிலோ இருக்கும். ஆனால் நமது நாட்டுக்கோழி முறையான வளர்ச்சி பெற 3 மாதம் ஆகும். கோழியை வறுக்க கேசரி பவுடர் பயன்படுத்தப்படுகின்றது. இப்படி எதை எடுத்தாலும் கலப்பட மயமாகிக் கொண்டிருக்கின்றது. அனைத்தும் நமது உடலுக்கு மிகுந்த தீமையை விளைவிக்க கூடியதாகும்.
எனவே அனைவரும் நமது பாரம்பரிய உணவு முறையை அறிந்துகொண்டு பயன் படுத்த வேண்டும். நம் மண்ணில் விளையும் பொருட்களை சாப்பிட வேண்டும். உணவில் உள்ள கலப்படங்களை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உணவுப்பொருட்கள் தொடர்பாக 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய குறுந்தகட்டை கலெக்டர் வெளியிட்டார்.